கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் தொகை
கன்னியாகுமரி
தமிழ் நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை என 4 நகரங்கள் உள்ளன.
தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது.
இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலமும், வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன.
மக்கள் தொகை
1,684 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் தொகை 18,70,374 ஆகும். அதில் ஆண்கள் 926,345; பெண்கள் 944,029 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 11.60% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1,111 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுகு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 91.75% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 93.65% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 89.90% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 1,82,350 ஆக உள்ளனர்.
இம்மாவட்டத்தில் இந்துக்கள் 9,09,872 (48.65%); கிறித்தவர்கள் 8,76,299 (46.85%); இசுலாமியர்கள் 78,590 (4.20%); மற்றவர்கள் 0.30% ஆக உள்ளனர்.