டிக் டாக் வீடியோ: மனைவியை கொன்ற கணவன்!
டிக் டாக் வீடியோ பதிவேற்றியதால் கணவனே மனைவியைக் கொலை செய்தது ஆந்திராவில் நடைபெற்றுள்ளது..
டிக் டாக் வீடியோ பொழுதுபோக்காக அமைந்தாலும் சில நேரங்களில் விபத்துகள், வன்முறைகள் ஆகியவற்றிற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன. டிக் டாக் வீடியோக்கள் சமூகத்தை சீரழிக்கின்றன என கலாச்சார காவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் டிக் டாக் வீடியோக்களில் வலம் வருவதை பொறுக்கமுடியாமல் ஆண்கள் சிலர் வன்முறையில் இறங்குகின்றனர்.
தமிழ்நாட்டில் இத்தகையை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் ஆந்திராவில் ஒரு பெண் டிக் டாக் வீடியோ காரணமாக கொல்லப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நரசரோ பேட் என்ற பகுதி. இங்கு 27 வயதான நபர் தனது மனைவி சுவர்தாவை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பணியாற்றிவருகிறார்.
இந்த கொலை சம்பவம் குறித்து நரசோரா பேட் டிஎஸ்பி எம்.வீரா ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நரசையா தனது சகோதரர் சித்தாலா சின்ன வெங்கையாவுடன் சேர்ந்து நவம்பர் 17ஆம் தேதி இந்த கொலையை செய்துள்ளார். நரசையா துண்டைக் கொண்டு சுவர்தாவின் மூச்சை நிறுத்தியுள்ளார், வெங்கையா காலை பிடித்துள்ளார். அதன்பின் அவரது உடலை பொட்லுரு சுடுகாட்டில் எரித்துள்ளனர்” என்றார்.
காவல்துறையினர் சுவர்தாவின் நகையைக் கொண்டு அடையாளம் கண்டுள்ளனர். சம்பவம் நடந்த அன்று நரசையா தனியாக இரவு 9.55 மணிக்கு ஒரு பாட்டிலில் பெட்ரோல் வாங்கிச் செல்வது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். சுவர்தா டிக் டாக்கில் தொடர்ச்சியாக வீடியோ பதிவிட்டுள்ளார். அதற்கு நரசையா எதிர்ப்பு தெரிவித்ததுடன் அடிக்கடி சண்டைபோட்டுள்ளார். தன்னை விட்டுச் சென்றால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதனால் ஐபிசி 302 படி அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 comments:
Write commentsMm
Reply